கோதை சொன்ன கீதை 11


கோதை சொன்ன கீதை 11


கண்ணா இதோ உன் கோதை ... அவள் மாலையை மட்டும் அல்ல அவளையும் மாலையாக ஏற்றுக்கொள் ... 

ஆண்டாள்! பெண்களின் திலகம். 

திருத்துழாய்ச் செடியின் கீழ்க்கிடந்த வைரத்துண்டு! 

பெரியாழ்வாருக்குக் கிடைத்த பெருநிதியம். 

கவிஞனின் ரோஜாக்கனவுகள் கூடச் சில வேளைகளில் கலைந்து விடுவதுண்டு. 

ஆனால், உள்ளத்தில் ஆழப்பதிந்த கண்ணன் என்னும் கனவு கலையவேயில்லை. 

ஆண்டாள் கண்ணனுக்காகவே பிறந்த மானிடப் பிறவியா? 

கண்ணனுக்காகவே சமைந்த மரகதச் சிலையா? 

கண்ணனையே கரம் பற்றி வாழ்ந்த கற்பகப் பூங்கொம்பா? 

ஒரு ஜீவாத்மாவின் பயணம் என்பது போல் இல்லாமல், கண்ணன் எனும் பரமாத்மாவுடனேயே கைகோத்துத் திரிந்தது ஆண்டாள் எனும் ஆத்மா!


விண்ணை மண்ணுக்கு இழுத்து வருவது அதிசயம். 

கண்ணனைத் திருவில்லிபுத்தூருக்கே ஆண்டாள் வரச் செய்தது பேரதிசயம் புயலுடன் போராடித் தென்றலைக் கைப்பற்றுவதைப் போல் மானிடக் கனவுகளுடன் போராடி இறைமையைக் கைப்பற்றிய தமிழ்க்கொடி ஆண்டாள். 

கண்ணனைப் பற்றிய வண்ணக் கனவுகள்தாம் காமன் வழிபாடாய் நாச்சியார் திருமொழியின் எச்சமாய்த் திகழ்கிறது. 

கண்ணனோடு தோழமை கொள்ளத்துடிக்கும் உயிர்த்துடிப்புத்தான் திருப்பாவையில் இறுகி உறைந்திருக்கிறது. 

ஆண்டாளின் உள்ளத்தில் பதிந்த காதல் விதைக்கு உரமாய் – நீராய் அமைந்தது தமிழல்லவா! 

அவள் உள்ளத்தில் வளர்ந்த காதல், தமிழாய் வளர்ந்தது. தமிழ், காதலாய் வளர்ந்தது. 

பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளம் போல் ஆண்டாளின் உள்ளம் கண்ணன் என்னும் பரவெளியையே நோக்கிச் சென்றது. 

கடல் என்னும் திரவச் சமவெளியில் எது ஆற்று நீர்? எது ஊற்று நீர்? 
எல்லாம் ஒன்றுதானே! 

கண்ணன் என்னும் மோனப் பெருவெளியில் கலந்த பின் ஆண்டாள் என்னும் மானுடப் பெண்ணுக்குத் தனித்துவம் எது? 

இந்தியரின் காதல் பற்றி படிமங்களில் பிறந்த ரதி, மன்மதன், காமன் ஆகிய படிமங்கள் சூக்குமமானவை; 

கண்ணன் படிமம் ஒன்றே தூலமானது; அப்படிமத்துக்குக் தகுந்த இணையாக வாழ்க்கைத் துணையாகத் தமிழர் அளித்த கொடையே ஆண்டாள். 

ஆண்டாளின் உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் உயிர்ச் சத்தாய் விளங்கியது கண்ணன் என்னும் உணர்வே!.

வறண்ட பாலையில் எதிர்பாராமல் குதித்தோடிய ஜீவநதி போல் இல்லை ஆண்டாளுக்குக் கண்ணன் அருள் பாலித்தது! 

திருந்திய கழனியில் மெதுவாகப் பாய்ந்து பரவும் நீர்போல் ஆண்டாள் உள்ளத்தில் கண்ணன் எனும் காதல் உணர்வு பரவியது. 

கண்ணன் என்னும் உணர்வுதான் ஆண்டாளின் தாய்ப்பால். 

கண்ணன் என்னும் ஒரு சொல்லையே அவள் பாராயணம் செய்தாள். 

தென்னந்தமிழுடன் தென்றலும் சேர்ந்து பிறந்ததைப் போல் கண்ணன் என்னும் நாமத்துடன் அவளுக்குக் காதலும் சேர்ந்து பிறந்தது. 

ஆண்டாள் வாழ்ந்த திருவல்லிப்புத்தூர்தான் ஆயர்பாடி...

அங்குள்ள பெண்களெல்லாம் இடைப்பெண்கள். 

அவர்களுள் ஒருத்தி ஆண்டாள். 

இவள் பேச்செல்லாம் இடைப்பேச்சு; முடை நாற்றம்; 

தாம் பாடிய பாடல்கள்மூலம் ஆண்டாள் காட்டிய பாவனையை நாம் வேறெப்படி விளக்க முடியும்?


இரு பெரும் பாடல்கள்* 

திருப்பாவை, நாச்சியார் திருமொழி இரண்டிலும் பக்திச்சுவை உண்டு; 

காதல் சுவை பேரளவுண்டு. 

இவை ஆண்டாள் காதலால் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடிய காதல் பக்திப் பாடல்கள், பருவம் தந்த குறிஞ்சிக் கனவுகள்! 

*மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்* 

என்ற வைராக்கியத்துடனேயே கண்ணன் எனும் பெருந்தெய்வத்தைக் கரம் பற்றிய காரிகை. 

ஆண்டாள் பாடல்கள் ஒவ்வொன்றும் இவ்வுறுதியின் உறை பொதி வடிவம்! 

திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாடல் ஆண்டாள் கண்ணனுடன் கலக்க இருக்கும் – கலந்த அனுபவத்தையே பேசுகின்றன. 

மார்கழி மாதத் திருநோன்பாகத் திருப்பாவை அமைய, 

தைத்திங்களில் காமனை வழிபட்டுக் கண்ணனைக் கண்டதாக நாச்சியார் திருமொழி அமைகிறது. 

காலம், இடம் கடந்த கண்ணன், பெரியாழ்வார் பாடல்களில் குழந்தையாக மாறுகிறான். 

ஆண்டாளின் நினைவிலோ, காதலனாக மலர்ச்சியடைகிறான். 

பிருந்தாவனக் கண்ணனாகப் பொலிவு பெறுகிறான். 

சொந்தங்களுக்கும் பந்த பாசங்களுக்கும் கட்டுப்படாத கண்ணன், ஆண்டாளின் தமிழுக்குக் கட்டுப்படுகிறான். ஆண்டாளை ஆட்கொள்கிறான்; அவளிடம் ஆட்படுகிறான்! 👍👍👍




Comments

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52