அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 4
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 4 பரமதத்தனுக்கு பயம் வந்து விட்டது .. ஒரு பெண் தெய்வத்தையா மணந்து கொண்டோம் ..?. அந்த உலக மாதாவுடனா நான் இவ்வளவு நாட்களாக குடும்பம் நடத்தினேன் ? ஐயோ இந்த பாவத்தை எவ்வளவு பிறவிகள் எடுத்து தீர்க்கப் போகிறேன் ...? எவ்வளவு முட்டாள் நான் .... புலம்பினான் .. கதறினான் ... பிராயச்சித்தம் உடனே செய்யவேண்டும் என்றே வியாபாரம் செய்வதாக சொல்லி வீட்டை விட்டு அதாவது புனிதவதியை விட்டு விட்டு கிளம்பினான் ... கால்கள் அவனை எங்கோ இழுத்துச் சென்றது ... முகத்தில் பரிதாபத்துக்குரிய தாடி முல்லை கொடி போல் படர்ந்தது ... செடியில் வளர்ந்த பஞ்சு அவன் கண்களில் வந்து அமர்ந்து கொண்டது ... செவிகள் கொஞ்சம் கேட்க்கும் சக்தியை இழந்தன ... வயிறு பசி எனும் வார்த்தையை மறந்து போயின ... நெஞ்சம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்றே சொல்லிக்கொண்டது... வெளி வரும் மூச்சும் உள்ளே போகும் காற்றும் ஐந்தெழுத்தின் நறுமணத்தை பரப்பியது உள்ளும் வெளியும். போன கணவன் திரும்பி வந்து விடுவான் என்றே புனிதவதி காத்திருந்தாள் ... நாட்கள் பல நகர்ந்தன ...