மலரும் நாராயணீயம் 6

மலரும் நாராயணீயம்  6



பட்டத்ரி :

ஏ குருவாயூரப்பா , இன்று 100 வது தசகம் ... உன் அருளால் உன்னை வர்ணிக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தாயே .. 

உன் கருணை யாருக்கு வரும் ? இது என்ன எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வரமா ? 

அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு வந்து எல்லோருக்கும் ரோக நிவர்த்தி செய்ததை காட்டிலும்  மிகப்பெரிய   ஔஷதம்  நாராயணீயம் அல்லவோ ? 

குருவாயூரப்பன் :

நாராயணீயம் என்று சொல்லி என்னை நன்றாக வேலை வாங்கினாய் .. என் தாய் யசோதை பார்த்திருந்தால் உன்னை சும்மா விட்டிருக்க மாட்டாள் ... 

பட்டத்ரி : உன்னை வெறும் தலையை மட்டும் ஆட்ட சொன்னேன் .. 

நீயோ நடித்து வேறு காண்பித்தாய் ... 

மீனாக துள்ளிக்  குதித்தாய் , ஆமையாக நீந்தி காண்பித்தாய் , 

வராகமாக ஓங்காரம் செய்தாய் , 
நரசிம்மனாக கர்ஜித்தாய் , 

வாமனனாக மூன்று அடி அளந்து காண்பித்தாய் 

என்னிடமும்  மூன்றடி  கேட்டாய் ... 
பரசுராமனனாக கோடாலியை காண்பித்து பயமுறுத்தினாய் ..  

ராமனாக வேடம் போட்டு அனுமனின் தரிசனமும் எனக்கு கிடைக்க செய்தாய் ... 

பலராமனாக மாறி தருமத்தை எடுத்து சொன்னாய் .. 

கண்ணனாய் என் குருவாயூரப்பனாக மாறி என்னை சொக்க வைத்தாய் .. 

கல்கி ரூபம் எடுத்து அதர்மங்களை வதம் செய்து காட்டினாய் .. 

யாருமே பார்க்காத காட்சி இது கண்ணா ....

இது மட்டுமா கண்ணா .. ஹயக்ரீவராக தரிசனம் கொடுத்து லலிதா சஹஸ்ரநாமத்தின் பெருமைகளை சொன்னாய் ... 

சிவந்த மலரதன் விரிந்த இதழ்நிகர்
ஒளிரும் கண்களாம் மலரிலே
பரந்த கடலதன் சிறிய அலைச்சுழல்
அனைய அலைக்குறும் புருவமும்
கவரும் அருட்கணின் குவிர்ந்த விழிகளில்
கருணை கருமணி அழகுடன்
உவக்கும் எழிலிணை நயக்கும் துணிவிலா
கடையன் விழைகிறேன் அருளுவாய்.

மகர வடிவினில் அழகுச் செவிகளாம்
இரண்டில் பளிச்சிடும் நீலமும்,
முகரும் நெடியதாம் மயக்கு நாசியும்,
பவழ இதழ்களில் தோன்றிடும்
மிகவும் குளுமையாய் புலரும் முறுவலும்,
விலகும் இதழிடை ஒளியுறும்
தகவு பற்களும் திகழும் எழில்முகம்
களிக்க எனக்குநீ காட்டுவாய்.

குருவாயூரப்பா 

காயாம்பூக் கொத்துபோல் அழகிய நீலநிற ஒளியை நான் எதிரில் காண்கின்றேன். 

அதனால் அம்ருத மழையால் நனைந்தவனாய் உணர்கின்றேன். 

அந்த ஒளியின் நடுவே அழகிய தெய்வீக பாலனின் உருவில், வாலிபத்தினால் மிக்க வசீகரமாய் இருக்கின்ற ஒரு வடிவத்தைப் பார்க்கின்றேன். 

பேரின்பப் பரவசத்தால் மெய்சிலிர்த்து நிற்கும் நாரதர் முதலியவர்களாலும், அழகிய பெண்களாக உருவம் கொண்டு நிற்கும் உபநிஷத்துக்களாலும் சூழப்பட்டு இருக்கும் தங்களை நான் நேரில் காண்கின்றேன்.


உமது தலைமுடி கருத்த நிறத்துடன், சுருண்டு, நெருக்கமாகவும், தூய்மையாகவும் விளங்குகின்றது. 

அழகான முறையில் கட்டப்பட்டிருக்கும் கொண்டையுடன் விளங்குகின்றது. 

ரத்தினங்களாலும், கண்கள் கொண்ட மயில் தோகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, மந்தார புஷ்ப மாலை சுற்றப்பட்டிருக்கும் உமது கேசங்களைக் காண்கின்றேன். 

வெண்மையான, மேல்நோக்கி இடப்பட்ட அழகிய திலகத்தோடு கூடிய, பிறை நிலாவினைப் போன்ற, மனதிற்கு ரம்மியமான தங்கள் நெற்றியை நான் காண்கின்றேன்.

உமது கண்கள், கடலின் அலைகளைப் போல் அசைகின்ற புருவங்களால் மனதைக் கவர்வதாய் இருக்கின்றது. 

இமை மயிர்கள் கருத்து அழகாய் விளங்குகின்றது. 

நீண்ட சிவந்த தாமரை மலரின் இதழ் போன்ற கருவிழிகளை உடைய தங்கள் பிரகாசிக்கும் இரு கண்கள், தன் கருணை நிரம்பிய பார்வையால் அகில உலகங்களையும் குளிரச் செய்கின்றது. 

அத்தகைய தங்கள் பார்வை ஆதரவற்ற என்மேல் விழ வேண்டும்.

Comments