பச்சைப்புடவைக்காரி --தக்கை ராமாயணம்
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
தக்கை ராமாயணம்
ரவி எவ்வளவோ ராமாயணங்கள் கேட்டிருப்பாய் -
நேற்று புன்னகை ராமாயணம் பார்த்தோம் - சிலத் துளிகள் தான் - மீண்டும் பிறகு முழுவதையும் பார்ப்போம் ---
இன்று நாம் பார்க்கப்போவது தக்கை இராமாயணம்
அம்மா சத்தியமாய் கேள்விப்பட்டதில்லை .
ரவி நான் சொல்ல வந்த காரணம் -- பெண்மை பற்றி அந்த காலத்தில் இருந்தே பலர் குறைவாக மதிப்பிட்டு வருகின்றனர் --- அவர்கள் ஆண்களாக பிறந்ததால் ஏதோ இவர்களுக்கு தலையில் கொம்பு கூட இருப்பதைப்போல் .....
என் ஈசனே தன் உடலில் எனக்கு சரிபாதி கொடுத்து ஆண்களும் பெண்களும் சம உரிமை கொண்டவர்கள் என்று காண்பித்தார் ---
இதிலிருந்த உண்மையையும் தத்துவத்தையும் பிறகு வந்த ஆண்கள் எவருமே சரியாக புரிந்து கொள்ளவில்லை - இது எனக்கு பெரிய மனவருத்தம் ....
இங்கே வரும் ஒரு பெண் கதாபாத்திரம் தன் திறமையினால் பல ஞானிகளை , மகான்களை பெண்மையின் உயர்வை புரிந்துகொள்ளும் படி செய்தாள் - அவளைப்பற்றியும் சொல்லப்போகிறேன் ....
அம்மா இப்படி ஓவ்வொரு நாளும்
புதுப்புது விஷயங்களை தாங்கள் சொல்வதை கேட்க்கும்போது இதுதான் சொர்க்கம் என அறிந்துகொண்டேன் - சொல்லுங்கள் தாயே !
சொல்கிறேன் கேள்
சேலம் ஜில்லாவில் சங்ககிரி துர்க்கம் என்ற ஊர் ஒன்று இருக்கிறது. அங்கே பிறந்தவர் எம்பெருமான் கவிராயர் என்பவர். அவர் ஆயர் குலத்தில் உதித்தவர். இளமைக் காலத்தில் அவர் தமிழ் நாடு முழுவதும் பிரயாணம் செய்து பாண்டி நாட்டில் சில காலம் தங்கிச் சில வித்துவான்களை அடுத்துத் தமிழ் பயின்றார்.
பிறகு கொங்கு நாட்டிலுள்ள தம் ஊருக்குப் போய்த் தமிழ் நூல்களை ஆராய்ந்தும் பாடம் சொல்லியும் இன்புற்றுவந்தனர்.
அவருக்குக் கம்ப ராமாயணத்தில் பேரன்பு இருந்தது. அந்த நூலை அடிக்கடி படித்தும், அந்நூலின் நயங்களைப் பிறருக்குச் சொல்லி இன்புற்றும் பொழுது போக்கிவந்த அவர்பால் யாவருக்கும் நன்மதிப்பு உண்டாகி வளர்ந்து வந்தது. ராமாயணத்தில் ஊறிய அவருடைய வாக்கில் வரும் விஷயங்கள் பக்திச் சுவை ததும்ப இருத்தலை யாவரும் அறிந்து பாராட்டினர்.
கொங்கு நாட்டில் மோரூர் என்னும் ஊரில் அதைச் சூழ்ந்துள்ள கீழ்கரைப் பூந்துறைநாடு என்னும் பகுதிக்குத் தலைவனாக நல்லதம்பிக் காங்கேயன் என்னும் உபகாரி வாழ்ந்து வந்தான் (பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி).
அவன் தமிழன்பு மிகுந்தவன். தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் இயல்புடையவன். எம்பெருமான் கவிராயருக்கும் நல்லதம்பிக் காங்கேயனுக்கும் நட்பு உண்டாயிற்று. அடிக்கடி கவிராயர் மோரூருக்குப் போய்ச் சில தினங்கள் இருந்து அந்த உபகாரியோடு அளவளாவி இன்புறுவார். கம்பராமாயணச் சொற்பொருள் நயங்களை எடுத்து விளக்குவார்.
ஒரு நாள் காங்கேயன் கம்பராமாயணப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருந்தபோது எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டான். "என்ன நினைத்துக் கொண்டீர்கள்?" என்று புலவர் கேட்டார்.
"சோழ நாட்டின் பெருமையை நினைத்துப் பார்த்தேன்.அந்த நாட்டுக்கு எத்தனை நிலவளம் இருந்தாலும் அது பெரிய புகழ் ஆகாது. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பருடைய கவி வளம் உண்டான நாடு என்ற பெரும் புகழ் ஒன்றைப்போல வேறு எதுவும் வராது. 'சோழ நாடு கம்பராமாயணத்தை உடைத்து' என்று பாராட்டுவதுதான் முறை" என்றான் காங்கேயன்.
"திடீரென்று ஏன் இந்த ஞாபகம் உங்களுக்கு வந்தது?"
"திடீரென்று வரவில்லை. கம்பராமாயணத்தை நினைக்கும்போதெல்லாம் இந்த நினைவும் உடன் வருகின்றது. இன்று அந்த நினைவு மிகுதியாகிவிட்டது."
"உண்மைதான். ஒரு வேளை தின்றால் மறு வேளைக்குப் பயன்படாத சோற்றைத் தருவது பெரிய சிறப்பன்று. எக்காலத்தும் நினைக்க நினைக்க இன்பத்தைத் தரும் கவிச் செல்வத்தை, அதுவும் சுவைப்பிழம்பாக விளங்கும் கம்பராமாயணத்தைத் தந்த சிறப்பினால் சோழ நாடு எல்லா நாடுகளிலும் உயர்ந்து விளங்குகிறது."
"அந்த மாதிரியான பெருமை வேறு நாட்டிற்கு வரக்கூடாதா?" என்று ஆவலாக வினவினான் காங்கேயன்.
"மீட்டும் கம்பர் அந்த நாட்டிற் பிறந்தால் வரக்கூடும்!"
"இது சாத்தியமா? அவ்வளவு புகழ் இல்லாவிட்டாலும் 'நம்முடைய நாட்டிலும் ஒரு ராமாயணம் பிறந்தது' என்ற புகழை அடைய முடியாதா?"
காங்கேயன் கருத்து என்னவென்று ஆராய்வதில் புலவர் மனம் சென்றது; அவர் மௌனமாக இருந்தார்.
"என்ன, கொங்கு நாட்டிலும் ஒரு புலவர் ராமாயணம் ஒன்றை இயற்றினார் என்ற புகழை இந்த நாட்டுக்கு அளிக்க முயல்வது கடினமான காரியமா?"
புலவருக்குக் காங்கேயன் கருத்து விளங்கிவிட்டது. அவர் புன்னகை பூத்தார். காங்கேயனும் புன்முறுவல் செய்தான்.
"என் கருத்தை உணர்ந்துகொண்டீர்களென்று நினைக்கிறேன். அந்தப் புகழை உண்டாக்க..."
"நான் முயல்வேன்" என்று உற்சாகத்தோடு சொல்லி வாக்கியத்தை முடித்தார் கவிராயர்.
"சந்தோஷம்! நல்லது; பெரும் பாக்கியம். இந்த நாட்டின் அதிருஷ்டம்! உங்கள் திருவாக்கினால் ஒரு ராமாயணம் வெளியாக வேண்டுமென்று நான் பல நாளாக ஆசைகொண்டிருந்தேன். அந்த விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்ல அஞ்சினேன். கம்பராமாயணத்திலே ஊறி நிற்கும் உங்களுக்கு எல்லா வகையான தகுதிகளும் இருக்கின்றன. நீங்கள் மனம் வைத்தால் எளிதில் நிறைவேற்றுவீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு."
இந்தக் தூண்டுதலின் விளைவாக எம்பெருமான் கவிராயர் தக்கை என்னும் வாத்தியத்தோடு பாடுவதற்கு ஏற்ற இசைப் பாட்டுக்கள் அமைந்த ராமாயணம் ஒன்றை எளிய நடையில் பாடி முடித்தார். நல்லதம்பிக் காங்கேயனுடைய ஆதரவால் அந்தத் தக்கை ராமாயணம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.
தக்கை ராமாயணம் அரங்கேறிய இடம் வரதராஜா பெருமாள் கோயில்-சங்ககிரி
திருசெங்கோட்டு மன்னர் மோரூர் காங்கேயர் வேண்டுகோளின் படி, கொங்கதேசத்தில் இயற்றப்பட்ட ராமாயணம்.. தக்கை என்னும் இசைக் கருவியால் இசைத்து பாடப்படுவது. கம்ப ராமாயணத்தின் சுவை குன்றாது, அதே நேரம் பொருட்சுவை நிரம்பி சுருக்கி இசையோடு வழங்கப்பட்டது. திருசெங்கோட்டிற்கு இந்த இலக்கியம் ஒரு மணிமகுடம். பாடியவர் பத்தர்பாடி எம்பெருமான் கவிராயர்.
திருசெங்கோட்டு மன்னர் மோரூர் காங்கேயர் வேண்டுகோளின் படி, கொங்கதேசத்தில் இயற்றப்பட்ட ராமாயணம்.. தக்கை என்னும் இசைக் கருவியால் இசைத்து பாடப்படுவது. கம்ப ராமாயணத்தின் சுவை குன்றாது, அதே நேரம் பொருட்சுவை நிரம்பி சுருக்கி இசையோடு வழங்கப்பட்டது. திருசெங்கோட்டிற்கு இந்த இலக்கியம் ஒரு மணிமகுடம். பாடியவர் பத்தர்பாடி எம்பெருமான் கவிராயர்.
எம்பெருமான் கவிராயருடைய மனைவியாகிய பூங்கோதை என்னும் பெண்மணி, புலவருக்கு ஏற்ற மனைவியாக இருந்தாள்.
அவளும் தமிழ்ப் புலமை உடையவள். பிறந்த வீட்டிலே தமிழ் நூல்களைப் படித்து அறிவு வாய்ந்ததோடு எம்பெருமான் கவிராயருக்கு வாழ்க்கைப்பட்ட பிறகும் அந்த அறிவைப் பன்மடங்கு பெருக்கிக்கொண்டாள். இதனால் அவளும் இலக்கண இலக்கியத் தேர்ச்சி பெற்றுச் செய்யுள் இயற்றும் வன்மையை உடையவளானாள்.
ஒரு நாள் சில வித்துவான்கள் தக்கை ராமாயணம் பாடிப் புகழ் பெற்ற எம்பெருமான் கவிராயரைப் பார்க்கும்பொருட்டு வந்திருந்தார்கள். அவர்கள் வந்த சமயத்தில் கவிராயர் ஏதோ வேலையாகப் புறத்தே சென்றிருந்தார். வித்துவான்கள் வந்திருப்பதை அறிந்த பூங்கோதை தன் குழந்தைகளை அனுப்பி அவர்களைத் திண்ணையிலே உட்கார்ந்திருக்கும்படி சொல்லி வெற்றிலை பாக்கும் அனுப்பினாள்
அவர்கள் திண்ணையிலேயே அமர்ந்து தாம்பூலத்தைப் போட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழ் சம்பந்தமான பேச்சாக இருந்ததனால் பூங்கோதை வீட்டிற்குள் இருந்தபடியே அந்தச் சுவையுள்ள சம்பாஷணையைக் கவனித்து ரசித்து வந்தாள்.
எம்பெருமான் கவிராயருடைய பெருமையையும் தக்கை ராமாயணச் சிறப்பையும் பற்றிப் பேசினார்கள். கம்ப ராமாயண நயம் இடையே வந்தது. தமிழ்ப் பாடல்களும் புலவர்களைப்பற்றிய செய்திகளும் வந்தன. ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிரியமான செய்திகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். பேச்சு மெல்ல மெல்லப் பெண்களைப்பற்றிய விவகாரத்தில் திரும்பியது. "பெண்கள் தனியே வாழ முடியாது. எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண்புத்தி பின்புத்திதான்" என்றார் ஒருவர்.
"பேதையரென்ற பெயரே அவர்களுடைய அறியாமையைப் புலப்படுத்தவில்லையா?" என்றார் மற்றொருவர்.
"தெரியாமலா பரிமேலழகர், 'அறிவறிந்த மக்கள்' என்ற திருக்குறளுக்கு 'அறிவறிந்த என்பது பெண்ணொழித்து நின்றது' என்று எழுதினார்?" என்று ஆதாரங் காட்டினார் வேறொருவர்.
இதுவரையில் அவர்களுடைய பேச்சிலே இன்பங்கண்டு நின்ற பூங்கோதைக்கு, பெண்களை அவமதிக்கும் இந்த அதிகப் பிரசங்கத்தைக் கேட்கச் சகிக்கவில்லை.
அவர்களோ மேலும் பெண்களை இழிவாகப் பேசலானார்கள். ஒருவர் பாடல் சொல்கிறார்; ஒருவர் உரையைக் காட்டுகிறார்; வேறொருவரோ புராண இதிகாசக் கதைகளை உதாரணமாக எடுத்துச் சொல்கிறார்; மற்றொருவர் தம்முடைய அநுபவத்திலே அறிந்த நிகழ்ச்சியை விளக்க ஆரம்பித்தார்.
கவிராயர் மனைவிக்குக் கோபம் கோபமாக வந்தது. அவர்களுக்கு எதிரே சென்று அவர்கள் வாயை அடக்க வேண்டுமென்று ஆத்திரம் பொங்கியது. ஆனாலும் இயல்பாக இருந்த நாணம் மிஞ்சியது. திண்ணைப்பேச்சில் பெண்ணைப் பழிக்கும் படலம் இன்னும் முடிந்த பாடில்லை. 'ஏதாவது ஓர் உபாயம் செய்து தான் தீரவேண்டும்' என்று துணிந்தாள் அந்தத் தமிழ் மங்கை.
சிறிதுநேரம் யோசித்தாள். ஒரு சிறிய ஓலையையும் எழுத்தாணியையும் எடுத்தாள். என்னவோ எழுதினாள். ஒரு குழந்தையைக் கூப்பிட்டு, "இந்தா, இதைக் கொண்டுபோய்த் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்களிடம் கொடு" என்றாள்.
குழந்தை அப்படியே அதைக் கொண்டுபோய்த் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்களுக்குள் ஒருவர் கையில் கொடுத்தது.
அதை அவர் பார்த்தவுடனே அவர் முகம் மங்கியது. ஓலையை மற்றொருவர் பார்த்தார். அவர் பேச்சு நின்றது. ஒவ்வொருவராகப் பார்த்தார்கள். எல்லோரும் திடுக்கிட்டு, ஸ்தம்பித்து, மௌனமானார்கள்.
ஓலையில் என்ன இருந்தது? பூங்கோதை அவர்களை வைது ஒன்றும் எழுதவில்லை; 'நீங்கள் இப்படிப் பெண்ணினத்தை அவமதிப்பது தவறு' என்றும் எழுதவில்லை. ஆனால் ஒரு வெண்பாவை எழுதி அனுப்பினாள்.
'ஆண்மக்கள் பெண்களைக் காட்டிலும் அறிவில் தாழ்ந்தவர்கள்' என்று அந்தக் கவி சொல்லியது.
"அறிவில் இளைஞரே ஆண்மக்கள்" என்ற முதலடியே அவர்களைத் திடுக்கிடச் செய்தது. இவ்வளவு நேரம் பேசிக்கொண் டிருந்தபோது அவர்கள் சொன்ன அத்தனை பேச்சுக்கும் விரோதமான கருத்து; அது மட்டுமா?
"மாதர், அறிவில் முதியரே யாவர்."
இதென்ன வெட்கக் கேடு? பெண்கள் அறிவில் ஆடவர்களைக் காட்டிலும் - அவர்களைக் காட்டிலும் - முதியவர்களாம்! இதற்கு என்ன ஆதாரம்?
"அறி கரியோ?"
இதை அறிந்துகொள்வதற்குச் சாட்சியா? இதோ
"தாம்கொண்ட சூலறிவர் தத்தையர்; ஆண்மக்கள், தாம்கொண்ட சூலறியார் தாம்."
சாஸ்திரங்களிலும் பழைய நூல்களிலும் சொல்லப்பட்ட ஒரு தத்துவத்தை ஆதாரமாகப் பாட்டு எடுத்துக் காட்டுகிறது. உயிர் தாயினுடைய கர்ப்பத்திலே புகுவதற்கு முன்பு இரண்டு மாதங்கள் தகப்பனுடைய கர்ப்பத்திலே இருக்குமென்று அந் நூல்கள் சொல்கின்றன.
மாதர் தாம் கர்ப்பமுற்ற செய்தியை அறிந்துகொள்வார்கள். ஆடவர்களோ தம்மிடத்தில் உயிர் தங்கியிருப்பதை அறிய முடிவதில்லை. இந்த விஷயத்தில், அதாவது தமக்குச் சூல் உண்டாகியிருக்கிறது என்று அறிந்துகொள்வதில் ஆடவர், பெண்களிலும் தாழ்ந்தவர்களே. அதைத்தான் அந்த வெண்பாவின் பிற்பகுதி சொல்லுகிறது.
திண்ணையில் இருந்த வித்துவான்கள் அந்தப் பாடலின் ஒவ்வோர் அடியையும் கவனித்துப் பார்த்தார்கள். முன்னே ஆரவாரித்துப் பெண்களை இழித்துப் பேசியதற்கு நாணமடைந்தார்கள்.
"இந்தப் பாடல் எந்த நூலில் இருக்கிறது?" என்று ஒருவர் மெல்லத் தமக்குள்ளே கேட்டார். யாருக்கும் தெரியவில்லை.
'கவிராயர் மனைவி நன்றாகப் படித்திருக்கிறாள். நம்முடைய வாயை அடைக்கத் தக்க மேற்கோளைத் தெரிந்து நம் பேச்சுக்குப் பதிலாக அனுப்பியிருக்கிறாள்.
இது நமக்குத் தெரியாத நூலாகவும் இருக்கிறதே!' என்று எண்ணி மனக்குழப்பமும், 'தவறு செய்துவிட்டோமே' என்ற அச்சமும் உடையவர்களாகி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
அப்போது எம்பெருமான் கவிராயர் வந்தார். அவர் வரவைக் கண்டு யாவரும் எழுந்து அஞ்சலி பண்ணினர். "வாருங்கள். வந்து நெடுநேரம் ஆயிற்றே?" என்று சொல்லிக் கவிராயர் அவர்களை வரவேற்றார்.
"முதலில் உங்கள் மனைவியாரிடம் 'எங்களைப் பொறுத்தருள வேண்டும்' என்ற எங்கள் வேண்டு கோளைத் தெரிவித்து அவர்களுடைய பெருமையை அறியாத எங்களை மன்னிக்கச் சொல்லும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்" என்றார் ஒருவர்.
கவிராயருக்கு ஒன்றும் விளங்கவில்லை. விரைவாக உள்ளே சென்று, "என்ன நடந்தது?" என்று பூங்கோதையைக் கேட்டார். புன்சிரிப்போடு நிகழ்ந்தவற்றை அவள் சொல்லி, "வந்த விருந்தினர்களை அவமதித்த குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேண்டும்" என்றாள்.
கவிராயருக்கு உள்ளத்துக்குள்ளே மகிழ்ச்சி. புன்முறுவலோடு திண்ணைக்கு வந்து, "உங்களுடைய மன்னிப்பைத்தான் அவள் வேண்டுகிறாள்" என்று சொல்லி அமர்ந்தார்.
"நாங்கள் மன்னிப்பதா? இதோ இந்தப் பாட்டுச் சொல்லுமே. அந்தப் பெருமாட்டியின் பேரறிவை. நாங்கள் இனி எந்த இடத்திலும் இந்தப் பிழையைச் செய்யமாட்டோம்."
புலவர் பாட்டை வாங்கிப் பார்த்தார்.
"அறிவில் இளைஞரே ஆண்மக்கள் மாதர் அறிவில் முதியவரே ஆவர் - அறிகரியோ தாம்கொண்ட சூலறிவர் தத்தையர் ஆண்மக்கள் தாம்கொண்ட சூலறியார் தாம்"
என்று இருந்தது.
"பார்த்தீர்களா? இது தான் எங்களுக்கு அறிவூட்டியது. ஒரு சந்தேகம்: இந்தப் பாடல் எந்த நூலில் இருக்கிறது? அதைத் தெரிவித்தருள வேண்டும்."
புலவர் சிறிதும் யோசியாமலே, "இதை அவளே தான் பாடி உங்களிடம் அனுப்பினாள்" என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்.
அவர்கள் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. "ஹா!" என்று அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
புரிந்துகொண்டவர்கள் பெண்களை சக்தியாக பார்க்க ஆரம்பித்தனர் --- எல்லோருமே சொல்ல ஆரம்பித்தது எங்கெங்கு காணிலும் சக்தியடா ...
அம்மா உண்மை -- ஸ்ரீமாதா என்ற முதல் நாமத்துடன் லலிதா சஹஸ்ரநாமம் தொடங்குகிறது --- பெண்மையை போற்ற வணங்க தெரியாதவன் இருந்தும் இறந்து போனவன் தாயே
சிரித்துக்கொண்டே கடம்ப வனத்துக்குள் வண்ண கிளியாக பறந்து சென்றாள் -- தக்கை ராமாயணம் இசை இசைக்க -- பெண்மை மத்தளம் கொட்ட மாணிக்க மூக்குத்தி குத்துவிளக்கு ஏற்ற பச்சை கிளியாக வானில் பறந்துகொண்டிருந்தேன் ...
Comments
அனுதினம் உன்னைப் பாட அடியேனும் ஆண்டாள் இல்லை
அவல்தந்து செல்வம் வாங்க அட நானும் குசேலன் இல்லை
கனவிலும் உன்னைக் கொஞ்ச கண்ணாநான் கோபியர் இல்லை
கடமைசெய் பலனில்லை என்றால் கேட்கநான் அர்ச்சுனன் இல்லை
தினமுந்தன் நாமம் சொல்லித் திரியநான் நாரதன் இல்லை
திறந்து என் நெஞ்சில் உன்னைக் காட்ட நான் அனுமனும் இல்லை.
மனதிலே ஒருநொடி எண்ணி மறுவேலை பார்க்கப் போகும்
மனிதன்நான் என்துயர் போக்க மாதவா மனமா இல்லை?
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்....
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சுலோகம் -8*
🌸🌸🌸🌸
கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மனோஹரா |
தாடங்க யுகலீ பூத தபனோடுப மண்டலா || 8
🌸🌸🌸🌸
कदम्ब मञ्जरीक्लुप्त कर्णपूर मनोहरा ।
ताटङ्क युगलीभूत तपनोडुप मण्डला ॥ 8 ॥
🌸🌸🌸🌸
Kadanba manjari klupta karna-pura mano-hara
Tatanka yugali-bhuta tapa-nodupa mandala – 8
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸
*ஒம் கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூரமனோஹராயை நம*
*ஒம் தாடங்க யுகலீ பூத தபனோடுப மண்டலாயை நம*
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் // ஸஹஸ்ர நாமாவளி விளக்கம்*
🌸🌸🌸🌸
*கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மனோஹரா* - லலிதாம்பாளின் செவிகள் அன்றலர்ந்த அழகு மிகுந்த கதம்ப மலர்கள் போல.
🌸🌸🌸🌸
*தாடங்க யுகலீ பூத தபனோடுப மண்டலா* - கண்ணைப்பறிக்கும் ஒளி வீசும் சூரியனும் சந்திரனும் என்னை போட்டுக்கொள் என்று எதிரே வந்து நின்றால் போனால் போகிறது என்று காதில் அணிபவள்
🌸🌸🌸🌸
மங்கைரகபிறப்பதற்கு
மாதவம் செய்திட வேண்டும் அம்மா
இந்த பங்கையர் கைநலம்
பார்த்தல்லவோ பாரில் அறங்கள் வளருதம்மா!
உங்கள் கதை இதை அழகாக்ககூறுகிறது.
அருமை ... அற்புதம் 👍👍👍💐💐💐
அவல்தந்து செல்வம் வாங்க அடியேன் நானும் குசேலனாக வர வேண்டும்
கனவிலும் உன்னைக் கொஞ்ச அடியேன் உன் கோபியாக தெரிய வேண்டும்
கடமை செய் பலனில்லை என்றால் கேட்க நான் அர்ச்சுனனாக மாற வேண்டும்
தினமுந்தன் நாமம் சொல்லித் திரியநான் நாரதனாக வாழ வேண்டும்
திறந்து என் நெஞ்சில் உன்னைக் காட்ட நான் அனுமனாக இருக்க வேண்டும் .
மனதிலே ஒருநொடி எண்ணி மறுவேலை பார்க்கப்போகும் மடையன் நான்
மனிதன் நான் என் துயர் போக்க நடமாடும் தெய்வமே நீ மீண்டும் இங்கே வரவேண்டும் 🥇🥇🥇
தவறில்லை இறைவா
பிறப்பு முதல் இறப்பு வரை
அவளுக்குள் எத்தனை வலிகள்
என்றும் இதை உணராமல் வாழும்
ஆண்கள்... மிக அருமையாக இக்கருத்தை வெளிக்கொணர்ந்துள்ள வார்த்தை சித்தருக்கு நன்றிகள் பல பல...👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👏👏
தவறில்லை இறைவா
பிறப்பு முதல் இறப்பு வரை
அவளுக்குள் எத்தனை வலிகள்
என்றும் இதை உணராமல் வாழும்
ஆண்கள்... மிக அருமையாக இக்கருத்தை வெளிக்கொணர்ந்துள்ள வார்த்தை சித்தருக்கு நன்றிகள் பல பல...👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👏👏
திங்களுக்கும் தித்திக்கும் அமுதம் தருபவன் நீயன்றோ சாயி !
நட்சத்திரங்கள் மின்ன செய்வதும் நீயன்றோ சாயி !!
நாங்கள் நலாமாய் வாழ்வதும் உன் அருளன்றோ சாயி !
கவலைகள் இல்லா மனம் தருவாய் சாயி ! இல்லை என்றால் அதை தீர்க்கும் உபாயம் தருவாய் சாயி !
தன்னை போல பிறரை என்னும் தன்மை தருவாய் சாயி... தவிக்கும் உயிர்களுக்கு உதவி செய்ய அருள்வாய் சாயி
வேண்டுவது ஒன்றும் இல்லை சாயி ... வேண்டாமல் தருவதும் நீ யன்றோ சாயி 🙏🙏🙏
பரம்கொண்ட புகழ்கிளியும் அங்கயற் கண்களும்
சிரம்கொண்ட செங்கீரை நடைபயின்ற பாதங்களும்
கரம்கொண்ட மதுரைமா நகரும் என் கண்களை நீங்காவே !
விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள் -மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை அன்னையின் திருநாமங்கள் -முன்புசெய்த
பழிக்குத்துணை புகழ்கிளி வாக்கும் – பயந்த தனி
வழிக்குத் துணை அங்கயற் கண்ணி அருளாட்சியுமே !
சீரான கோலதிருச் செல்வமே ! -திருமுகம்
பாராதிருந்தால் என் செய்வேன் ! அங்கற்க் கண்ணியே!- இனியும்
வாராதிருந்தால் நின் மீன்வடி விழிக்கு மைஎழுதேன் ! -வினையேன்
தீராது அழுவேன் ! அழுதால் உன்னைப் பெறலாமே !
உளத்தூயன் ஆனந்தன் சத்யன் நீ ராமா
பெரியோன் நீ குணமற்றோன் சிதைவழிவு அற்றோன்
பேர் இன்பமே பெரும்சொத்தே சரணம் ஶ்ரீ ராமா (1)
புவிராஜன் அசகாயன் பேரமைதி முக்தன்
சம்சாரக் கடல் தாண்ட பாதை நீ ராமா
தேவர்க்குத் தேவன் பெருந்தேவே மாண்பே
நரருக்கு இறைவன் நீ உச்சம் ஶ்ரீ ராமா (2)
கலைக்கெல்லாம் அதிபன் நீ ப்ரம்மம் நீ ராமா
காசியில் சிவனோதும் தாரகம் நீ ராமா
இறந்தவர்கள் காதினிலே ராம்ராம ராமா
என சிவனோதும் திருநாமா ஶ்ரீ ராமா ராமா (3)
பெரும் ரத்ன பீடத்தில் வீற்றுள்ளாய் ராமா
கற்பக மரத்தடியில் கற்பகமாய் ராமா
ஒரு கோடி சூரியனாய் ஒளிர்கின்றாய் ராமா
சீதையும் லக்ஷ்மணரும் பணிந்தேத்தும் ராமா (4)
உனக்கழகூட்டும் செம்பட்டை பொன் இடையில் கட்டும்
நீ தரிக்கும் மலர் மாலைகளை கருவண்டு சுற்றும்
உன் பாதங்களின் கொலுசுகளோ கலகலத்து ஒலிக்கும்
ஶ்ரீராமா உன் மார் மீது கெளஸ்துபமும் ஜொலிக்கும் (5)
பல நிலவுகளாய் சூரியராய் ஒளிர்கின்றாய் ராமா
பிரம்மாவும் சிவனாரும் பணிவதனால் ராமா
உன் பாதம் அவர் மகுட மணி ஒளிபெற்று ஒளிரும் (6)
பக்தாஞ்சநேயன் உடன்மற்ற பக்தர்
புடைசூழ விளங்கும் ராமா நீ வாழ்க
சின்முத்திரைக் காட்டி ஞானமதை வழங்கும்
உனையன்றி வேறொருவர் நான் வணங்க மாட்டேன் (7)
என் உயிரைக் கேட்டு எமன் வந்து நின்றால்
பயம் கூட்டும் வண்ணம் அவர் தூதர் வந்தால்
அப்போது கோதண்ட ராமா நீவருவாய்
உன் காட்சி என் பயங்கள் அதைப் போக்கும் போக்கும் (8)
இனியவனே ஶ்ரீராமா உன்னிதயம் குளிர்வாய்
கைகேயி புத்திரன் சுமித்திரையின் புதல்வர்
பணிந்தேத்தும் ராமாவுன் ஆற்றலதால் உதவு (9)
வானரர்கள் வானவர்கள் சிற்றரசர் பக்தர்
தளபதிகள் புடைசூழ ஶ்ரீராமா வீற்றாய்
என் இறைவா உனை தொழுதேன் மனம் குளிர்வாய் குளிர்வாய்
உன் ஞான ஒளியதனால் என்னகயிருளை களைவாய் (10)
எனையன்றி எனைசுற்றி எல்லாம் நீ ராமா
நான் வணங்கும் ஓரிறைவன் நீதானே ராமா
உனையன்றி வேறொன்று இருப்பதாய் நான் எண்ணேன்
ஐம்பூதங்களும் உனிலிருந்து தோன்றியவை அன்றோ (11)
தேவருக்கு தேவே ஶ்ரீராமா வணக்கம்
ஜானகியின் மணவாளா ஶ்ரீராமா வணக்கம்
மலர்க்கண்ணா மலர்நாபா ஶ்ரீராமா வணக்கம் (12)
பக்தர்களை உயிராக நினைப்பவனே வணக்கம்
புண்ணியம் செய்தவர்கள் உனைக்காண முடியும்
வேதங்கள் காட்டுகின்ற ஆதிமுதல் பொருளே
சீதையவள் நாயகனே அழகனே வணக்கம் (13)
அண்டத்தை படைத்தவனே அழிப்பவனே வணக்கம்
அண்டத்தை சுகிப்பவனே ஆள்பவனே வணக்கம்
அண்டத்தின் கண்ணே அண்டத்தை வெல்வாய்
அண்டத்தின் தந்தை நீ தாய் நீ ஶ்ரீராமா (14)
இவ்வண்டத்தின் இயக்கத்தை காத்து நின்றாய் ராமா
என் மனது உன்பாத சேவையதில் நிலைக்கும்
உன் பாத சேவையதால் மெய்ஞானம் கிடைக்கும் (15)
கல்லொன்று உன்பாத தூசியால் அன்று
தன் புணர்வாழ்வை பெற்றது அகலிகையாய் நன்று
உன் பாதம் அதை தினமும் தொழுபவரின் பிழைப்பு
மென்மெலும் மேன்மைகள் பெருவதென்ன வியப்பு (16)
ஶ்ரீராமா உன் கதையை நினைவில் கொள்ளும் நபர்கள்
ஶ்ரீராமா உன் பெயரை நிதம் கூறும் நபர்கள்
ஆசைகள் அனைத்தும் நிறைவேற காண்பர்
மரணத்தை காண்பதில்லை துயர்காண்பதில்லை (17)
மனம் வாக்குக்கு அகப்படாத விடுதலையின் ஊற்றே
உனை உச்சமென்று உணர்ந்தவன் உன்பாதம் தொழுவான்
உன் பாதம் தொழுவதினும் பேறெதுவும் உண்டோ (18)
உனைவிட உயர்ந்தவர் இல்லை இல்லை இல்லை
எங்கெங்கும் புகழுடையாய் அரக்கர்களை அழிப்போய்
உன் ஆற்றல் அது பற்றி உரைப்பதுவும் எளிதோ
சிறுபிள்ளை ஆகவே சிவன் வில்லை முறித்தாய் (19)
பத்துத்தலையனை அவன் மகன்களோடு
அவன் சுற்றத்தோடு கடல்சூழும் நிலத்தில்
கொல்ல வல்ல வீரர் உனைத் தவிர உண்டோ?
ராவணனை கொன்றவனே வென்றவனே ராமா (20)
நித்தியமும் ராம்ராம ராம்ராம வென்றே
ராமா உன் பெயரமுதச் சுவை சுவைத்து சுவைத்து
உனைப் போற்றும் அனுமனை போற்றுகின்றேன் ராமா (21)
எப்பொழுதும் ராம்ராம ராம்ராமவென்று
ராமாமுதத்தை பருகுகின்றேன் நாளும்
மரணத்தின் பயமில்லை எப்பயமும் இல்லை
உன்னருளால் உன்னருளால் ஶ்ரீராமா ராமா (22)
சீதையுடனான கோதண்டபாணி
புகழுடைய வீரா ஶ்ரீராமா ராமா
ராவணனின் காலா சுக்ரீவ நண்பா
உனையன்றி வேறு தெய்வமதும் உண்டு (23)
நாயகன் சிம்மாசனத்தில் அமர்ந்தவனே ராமா
உத்தமகுணங்களுக்காய் உயருண்மைக்காக
ஆதர்ச நாயகனாய் நிற்கின்றாய் ராமா (24)
ராமனன்றி வேறு தெய்வம் தேவையில்லை இல்லை
கடல்வென்ற புகழுடையோன் வணங்கத்தக்க புகழோன்
புன்னைகைக்கோ நல்நண்பன் தண்டகாரண்யம் வசித்தோன்
மந்தார மாலை சூடி ஞானமது அருள்வோன் (25)
ராவணனை கரன் முரனை அழித்தவனே என்று
சீதாராமென்று சீராமா என்று
எப்போதும் துதிப்பவனை நோக்குவாய் ராமா
அழிவில்லா உண்மையே ஶ்ரீராமா ராமா (26)
குரங்குகளின் மன்னனின் நண்பனே ராமா
மந்தார மரத்தின் கீழ் அழகாக நிற்போய்
உன் பாதமலர்கள் போற்றுகின்றேன் ராமா (27)
வான்புகழ் சீராமா அருள்புரிவாய் அருள்வாய்
எதிரிகளின் காலனே அருள்புரிவாய் அருள்வாய்
உன் பக்தர்களை உன்னுயிராய் காப்பவனே அருள்வாய்
என் ராமச்சந்திரனே என்னுயிரே அருள்வாய் (28)
அரவதனின் அசைவனைய இத்துதியை மனத்தில்
அனுதினமும் நினைப்பவன் ராமரிடம் அடைவான்
வேதத்திற்கொப்பாம் இப்பாடல் அறிவீர்
இதை தினம் பாடி பாடி ராமனருள் பெறுவீர்! (29)
ஆதி சங்கரரும் இயற்றிய இத்துதியை
ராமபக்த ரமேஷும் அருந்தமிழில் தந்தேன்
இதை தினம் சொல்வோர் இதயத்தில் பதிப்போர்
உத்தமராய் உலகில் உயர்வற உயர்வார் (30)
நீலமாக நீளுகின்ற வானம்போன்ற நாயகன்
எங்கும் எங்கும் இருப்பதில் அவரும் ஒரு வானமே
அவரை எண்ண ஆனந்தம் தொடுவது அவ்வானமே
நீலமாக இருப்பதில் அவர் தேகம் வானமே
பரந்தபடி இருப்பதில் அவர் உள்ளம் வானமே
வள்ளலாக தருவதில் அவரிதயம் வானமே
வானளாவ உயர்ந்து நிற்கும் அவர்புகழும் வானமே
தீமையதை கண்டுவிட்டால் இடிபோல தாக்குவார்
அவரடியில் பணிந்துவிட்டால் மேகமென அருளுவார்
அவர்குணத்தை தந்துதந்து நன்மையராய் மாற்றுவார்
தீமையதை நம்முள்ளே தங்காமல் ஓட்டுவார்
காய்ந்தமரம் பசுமையாக்கும் வானம் போன்ற ராமரே
வறண்டுபோன வாழ்க்கைக்கு மழையாகும் அவரருள்
காய்ந்துபோன மரத்தையும் காய்க்கவைக்கும் அவரருள்
வானம்பார்த்த பூமிபோல மனிதர்களின் வாழ்க்கையும்
இறையைப் பார்த்து கிடப்பதை உணருவீர் உணருவீர்
இறைவரில் சரண்புக உகந்த தெய்வம் ராமரே
அண்டியோரை கைவிடாத ராஜ ராஜராஜராமரே
வானிலுள்ள விண்மீன்கள் லட்சம்லட்சம் லட்சம்போல்
ராமரிடம் நன்மையும் லட்சம் லட்சம் லட்சமே
வானிலுள்ள விண்மீன்கள் லட்சம்லட்சம் லட்சம்போல்
ராமரிடம் பெற்ற நன்மை லட்சம் லட்சம் லட்சமே
அத்தனையும் வந்துவீழும் எறிந்தவர் முகத்திலே
ராமர்செயல் குற்றமென்று கொக்கரித்து மகிழுவோர்
நோய்கண்டு துன்பமுற்று சென்றுசாய்வர் நரகிலே
பூனையது கண்ணைமூடி வானமில்லை என்றக்கால்
வானமது வானமது இல்லையென்று ஆகுமோ
நாத்திகரும் புத்திகெட்டு ராமரில்லை என்றக்கால்
ராமபிரான் இல்லையென்று ஆகுமோ ஆகுமோ??
இடியதுவும் இடிக்கலாம் மின்னலதும் வெட்டலாம்
இடியதுவும் மின்னலதும் வானத்தை உடைக்குமோ
ராமபிரான் எதிரிகள் நூறுநூறு நூற்றுவர்
ராமரைத் தாக்கியும் அவரைவெல்ல முடிந்ததோ
மேகமது கலையுமே வானமென்றும் இருக்குமே
ராமபுகழ் மறுப்பவர் வந்துசெல்வர் மண்ணிலே
ராமபக்தர் பாட்டெல்லாம் என்றுமென்றும் உலவுமே
வெயிலதுவும் அடிக்கலாம் வானமதும் வாடுதோ
மழையதுவும் பெய்யலாம் வானமதும் நனையுதோ
ராமர் மண்ணில் வாழ்ந்தபோது இன்பதுன்பம் அப்படி
நாத்திகரின் வார்த்தைக்கெதிர் ராமபுகழ் அப்படி
நீலநிற வானமே நீலநிற வானமே
நீண்டுநீண்டு நீண்டுசெல்லும் நீலநிற வானமே
நீலவண்ண ராமரே நீலவண்ண ராமரே
நீடுநீடு நீடுபுகழ் நீலவண்ண ராமரே
வில்லாண்ட ராமசந்திரனே நின் சேவடி செவ்வித் திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்னிட புறத்தினில் நிற்கும் சீதையும் பல்லாண்டு
சேவையின் உருவாய் நின்வலபுறம் நிற்கும் லக்ஷ்மணரும் பல்லாண்டு
பக்தியின் உருவாய் நின்னடி தொழுகின்ற அனுமனும் பல்லாண்டே
நின் அன்பன்றி எதுவும் வேண்டிடா பரத ஆழ்வாரும் பல்லாண்டு
பரதரின் அன்பன்றி எதுவும் வேண்டா சத்ருக்னரும் பல்லாண்டு
ஊர்மிளை மாண்டவி சுருதகீர்த்தியாகிய தேவியர் பல்லாண்டு
உன்னை இம்மண்ணுக்கு சுமந்துப் பெற்ற கோசலைப் பல்லாண்டே
மணிவயிறதில் மாணிக்கமே உனைக் கொண்ட கோசலைப் பல்லாண்டு
உன் புகழ் வளர தன் புகழ் கெட்ட கைகசிப் பல்லாண்டு
நின் புகழதனை இதுவென்று உணர்ந்த சுமித்திரை பல்லாண்டே
நீ சொன்ன வேதத்தை உனக்கே உரைத்த வசிஷ்டர் பல்லாண்டு
தன் யாகம் காத்திட உன்னைக் கோரிய கௌசிகர் பல்லாண்டு
நீ யாகம் காத்ததை அறிந்துன்னை புகழ்ந்த சுமதியும் பல்லாண்டு
உன் பாதத் தூசியால் சாபம் நீங்கிய அகலிகை பல்லாண்டே
உனக்காய் சீதையை சிறப்புடன் வளர்த்த ஜனகரும் பல்லாண்டு
சீதையை தான் பெற்ற மகளாய் வளர்த்த சுனயனா பல்லாண்டு
சீதையை மணக்க நீ உடைக்க வில் தந்த சிவனார் பல்லாண்டு
சீதையை தனது கருவினில் சுமந்த பூமியும் பல்லாண்டே
அந்த கங்கை நீ கடந்திட படகதை தந்த குகனும் பல்லாண்டு
நீ படகிலேறும் முன் உன் பாதத்தை கழுவிய படகோட்டி பல்லாண்டு
கங்கை நீ கடக்கையில் கண்ணீர் சிந்திய சுமந்திரர் பல்லாண்டே
வனத்தில் உன்னை பூசித்து மகிழ்ந்த முனிவர்கள் பல்லாண்டு
பரத்துவாசர் அனுசுயா அத்ரி அகத்தியர் பல்லாண்டு
சுதீட்சணர் வான்மீகி சரபங்கர் சபரி நால்வரும் பல்லாண்டு
தண்டகவனத்தில் நின்னை சரணம் என்றவர் பல்லாண்டே
உன்னை கண்டிட சொர்க்கம் மறுத்த சரபங்கர் பல்லாண்டு
நீ உண்ணக் கனிகளை சுவைத்துத் தந்த சபரியும் பல்லாண்டு
உன் பெயர் சொல்லி குற்றங்கள் துறந்த வான்மீகி பல்லாண்டு
உனக்கு சூரியன் புகழை உரைத்து உதவிய அகத்தியர் பல்லாண்டே
உன் சார்பில் நற்புத்தி தசமுகனுக்கு உரைத்த அங்கதன் பல்லாண்டு
முதலில் பிழைத்தாலும் உன் பொன்னடி பணிந்த வருணன் பல்லாண்டு
அவ்வருணனின் உடல்மேல் பாலம் அமைத்த நளனும் பல்லாண்டே
பாலம் அமைத்திட உதவிய சிற்றுயிர் அணிலும் பல்லாண்டு
அன்னை சீதைக்கு ஆறுதல் கூறிய திரிசடை பல்லாண்டு
அன்னை சீதைக்கு ஆறுதல் கூறிய சரமையும் பல்லாண்டு
அன்னை சீதையின் துயரம் அழித்த மாருதி பல்லாண்டே
உன்னைக் கட்டிய நாகங்கள் துரத்திய கருடர் பல்லாண்டு
லக்ஷ்மணர் மயக்கம் போக்கிட உதவிய சுசேணர் பல்லாண்டு
லக்ஷ்மணர் மயக்கம் போக்கிட மருந்துகள் வழங்கிய பர்வதமும்
அதைத் தன் தோளில் சேயென சுமந்து கொணர்ந்த அனுமனும் பல்லாண்டே
அன்னை சீதையின் புனிதத்தை நிலை பெறச் செய்த அக்னியும் பல்லாண்டு
உன் அவதார நோக்கத்தை உனக்கெடுத்துரைத்த பிரம்மனும் பல்லாண்டு
உன்னை மீண்டும் கோசலம் திரும்பிட கூறிய சிவனும் பல்லாண்டே
அன்பனே நீ நீராடிய புனித நதிகள் பல்லாண்டு
மந்தாகினியும் கங்கையும் சரயுவும் பம்பையும் பல்லாண்டு
அன்பனே நீ மனம் மகிழ்ந்தே தங்கிய இடங்களும் பல்லாண்டு
அயோத்தியும் சித்திரகூடமும் பஞ்சவடியும் பல்லாண்டே
மூவேளை நீராடி நீ தினம் தொழுத சூரியன் பல்லாண்டு
உன் குலதெய்வமாய் உனக்கருள் செய்த ரங்கரும் பல்லாண்டு
சூரிய குலத்தினில் உனக்குமுன் பிறந்த மன்னர்கள் பல்லாண்டு
உன் அன்புப் பிள்ளைகள் லவனும் குசனும் பல்லாண்டு பல்லாண்டே
உந்தன் கதையை தமிழில் தந்த கம்பனும் பல்லாண்டு
உந்தன் கதையை பக்தியால் சொன்ன துளசிதாசருக்கும்
இன்னும் பற்பல கவிஞர்கள் தமக்கும் பல்லாண்டு பல்லாண்டே
வீரனே உந்தன் வலக்கையில் விளங்கும் கோதண்டம் பல்லாண்டு
கோதண்டத்தில் இருந்து புறப்படும் குறிதப்பா அம்புகள் பல்லாண்டு
குறிதப்பா அம்புகள் குறையாமல் கொடுக்குமுன் தூணியும் பல்லாண்டு
உன் இடையில் விளங்கிடும் வாளும் சிரசின் மகுடமும் பல்லாண்டே
அரசே உந்தன் ஆட்சியில் வாழ்ந்த மக்கள் பல்லாண்டு
அரசே உந்தன் ஆட்சியில் வாழ்ந்த மாக்கள் பல்லாண்டு
இறையே உன்னருளால் மோட்சம் புகுந்த உயிர்கள் பல்லாண்டு
அவ்வுயிர்கள் அனைத்துக்கும் உலகொன்று நிறுவிய நான்முகன் பல்லாண்டே
உந்தன் நாமத்தை சொல்வதில் மகிழும் மாருதி பல்லாண்டு
உந்தன் கதைகள் பேசுவோர் இடம்செல்லும் அனுமன் பல்லாண்டு
உந்தன் நினைவில் கண்ணீர் சொரியும் சிரஞ்சீவி பல்லாண்டே
பல்லாண்டென்று பவித்திரனை பரமேட்டியை கோதண்டமெனும்
வில்லாண்டான் தன்னை ஶ்ரீராமபக்தன் ரமேஷ் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் ஶ்ரீராம்ராமராம வென்று
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே
பெண்மையின் திறமை மிளிர சேய்யும் பதிவு
பிரமாதம் 🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
கல்லும் கரையும் என்பார் ... கல்லாய் மனம் கொண்டவள் இவள் ஏன் கரைய மறுக்கிறாள் ... ??
காற்றிலும் இடை குறைந்தவள்
நூலுக்கும் பகையானவள் என் வில்லுக்கு இரையாகி போவாளோ ?
மனித பதரை மணந்தவள் ஏன் இந்த மாணிக்கத்த்தை வெறுக்கிறாள் ...??
காட்டுக்கு வந்தவன் வீடு பெறும் நேரம் இது ...
கூடு விட்டு போகுபவன் சூடு பட்டுப் போவான் ..
சுந்திரன் என்பார் என்னை ..
இந்திரன் தோற்று ஓடினான் ..
சந்திரன் ஜடைக்குள் ஒளிந்து கொண்டான் ..
இந்த மந்திரன் என்னை என்ன செய்வான் ... ?
நான் அணைக்கும் முன் நீ அனைந்து போவோயோ சீதே ....??
20 கண்கள் சிந்தின காமம் எனும் நீரை .... 😰😰😰
தக்கை ராமாயணம் கேட்டறியாத கதை.
'பெண்கள் ஆண்களுக்கு இளைப்பில்லை காண் ' என்ற பாரதியின் கூற்று மெய்யே.
பூங்கோதையின் திறமை மட்டும் அல்ல
கவிராயரின் பெண்மையை போற்றும் பக்குவமும் அழகாக கூறியுள்ளீர்கள் அருமை .
இரண்டுமே அகிலத்தை கருவாக்கும்
ஆண்
ஆணாவதும்
ஆளாவதும்
பெண்ணாலே
பாதியை பதிக்கு கொடுத்து பதிபக்திக்கு பதியம் போட்டவன் பரமசிவன், பராசக்தி சிவன்
நாராயணன் நாதம் லஷ்மிதானே
விளையும் விஷயம் ஆணிடம் இருந்தாலும்
விளைவிக்கும் வித்தை பெண்ணிடம் மட்டுமே உண்டு
விதையானாலும் விளைய நிலம் வேண்டும்
அதற்கு பெண் எனும் நலம் வேண்டும்
அறிவு கொள்ள ஆணும் பெண்ணும் தேவையில்லை
ஆர்வம் எனும் கர்வம் வேண்டும்
அறிவுதான் சர்வம் எனும் சரணாகதி வேண்டும்
அறிவுக்கு
அறியும் ஆர்வம் மட்டுமே தெரியும்
அறிவை அறிந்து கொண்டால் அனைத்தும் புரியும்
கருப்பை கொண்டவளுக்கு கருத்துப் பை ஒரு கணமா
ஆணுக்கு பெண் நிகரில்லை
காரணம் ஆணும் பெண்ணும் வேறில்லை
பெண்ணிலிருந்து வந்தவனே ஆண்
ஆணிலிருந்து வந்தவளே பெண்
இருவருக்குமே இயல்பானது அறிவுக் கண்
அறிவு ஆராதித்தால் வெளிப்படும் பண்